Tamil சத்தியவேதம்

2 நாளாகமம் மொத்தம் 36 அதிகாரங்கள்

2 நாளாகமம்

2 நாளாகமம் அதிகாரம் 18
2 நாளாகமம் அதிகாரம் 18

1 யோசபாத் மிகுந்த செல்வமும் புகழும் பெற்றான். மண ஒப்பந்தம் மூலம் ஆக்காபின் உறவையும் தேடிக் கொண்டான்.

2 சில ஆண்டுகளுக்குப் பின் அவன் ஆக்காபைப் பார்க்கச் சமாரியாவுக்குப் போனான். அப்பொழுது அவனுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் விருந்து செய்ய எண்ணிய ஆக்காப், பல ஆடு மாடுகளை அடித்துக் கலாத் நாட்டு இராமோத்துக்கு அவர்களை வரும்படி அழைத்தான்.

3 இஸ்ராயேலின் அரசன் ஆக்காப் யூதாவின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நான் கலாத் நாட்டு இராமோத்தைப் பிடிக்கப் போகிறேன். நீர் என்னோடு வருகிறீரா?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீரும் நானும் ஒன்று தான். என் மக்களும் உம் மக்களும் ஒன்று தான். எனவே நான் உம்மோடு போருக்கு வருவேன்" என்றான்.

2 நாளாகமம் அதிகாரம் 18

4 மேலும் யோசபாத் இஸ்ராயேலின் அரசனை நோக்கி, "தயவு செய்து ஆண்டவரின் திருவுளத்தை இன்றே கேட்டறியும்" என்றான்.

5 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் போலித் தீர்க்கதரிசிகள் நானூறு பேரைக் கூட்டி வரச்செய்தான். "நாங்கள் கலாத் நாட்டு இராமோத்துக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லாமா, கூடாதா?" என்று அவர்களைக் கேட்டான். அவர்களோ, "போங்கள்; கடவுள் அரசர் கையில் அதை ஒப்புவிப்பார்" என்று மறுமொழி சொன்னார்கள்.

2 நாளாகமம் அதிகாரம் 18

6 பிறகு யோசபாத், "நாங்களும் கேட்டறிய விரும்புகின்றோம்; இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர் யாராவது உண்டோ?" எனக்கேட்டான்.

7 அதற்கு ஆக்காப், "ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டு அறிவதற்கு மற்றொருவன் இருக்கிறான். ஆனால் அவன் எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாகவே எப்போதும் இறைவாக்கு உரைக்கிறான். எனவே அவனை எனக்குப் பிடிக்காது. எம்லாவின் மகன் மிக்கேயாஸ் என்பவனே அவன்" என்றான். அதற்கு யோசபாத், "அரசே, நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்" என்றான்.

2 நாளாகமம் அதிகாரம் 18

8 உடனே இஸ்ராயேலின் அரசன் அண்ணகரில் ஒருவனை அழைத்து, "எம்லாவின் மகன் மிக்கேயாசை விரைவில் அழைத்து வா" என்று அவனுக்கு கட்டளை கொடுத்தான்.

9 அப்பொழுது இஸ்ராயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய்ச் சமாரியா நகர் வாயிலுக்கு அருகே இருந்த ஒரு வளாகத்தில் அமர்ந்திருந்தனர். போலித்தீர்க்கதரிசிகள் அனைவரும் அவர்கள் முன் தீர்க்கதரிசனம் உரைத்த வண்ணமாய் இருந்தனர்.

2 நாளாகமம் அதிகாரம் 18

10 அவ்வேளையில் கனானாவின் மகன் செதேசியாஸ். இரும்புக் கொம்புகளைச் செய்து, "இவற்றால் நீர் சீரியரை நெருக்கி அழித்துப் போடுவீர் என்று ஆண்டவர் சொல்லுகிறார்" என்றான்.

11 எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவ்வாறே தீர்க்கதரிசனம் கூறி, "நீர் கலாத் நாட்டு இராமோத்துக்கும் போவீர், வெற்றியும் பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார்" என்றனர்.

12 மிக்கேயாசை அழைக்கப் போன தூதுவனோ அவரை நோக்கி, "தீர்க்கதரிசிகள் சொல்வது அனைத்தும் அரசருக்குச் சாதகமாகவே இருக்கின்றன. எனவே நீரும் அவர்களைப் போல் அரசருக்குச் சாதகமாகவே பேச வேண்டும்" என்றான்.

2 நாளாகமம் அதிகாரம் 18

13 அதற்கு மிக்கேயாஸ், "ஆண்டவர்மேல் ஆணை! என் கடவுள் எனக்கு என்ன சொல்லுவாரோ, அதையே நான் அவரிடம் சொல்லுவேன்" என்றார்.

14 அவர் அரசனிடம் வந்தவுடனே அரசன் அவரை நோக்கி, "மிக்கேயாஸ், நாங்கள் கலாத் நாட்டு இராமோத்துக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லலாமா, கூடாதா?" என்று கேட்டான். அதற்கு மிக்கேயாஸ், "போங்கள், எல்லாம் வெற்றிகரமாகவே முடியும்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.

2 நாளாகமம் அதிகாரம் 18

15 அரசன் அவரைப்பார்த்து, ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கேட்கிறேன்; பொய் பேச வேண்டாம்; உண்மையைச் சொல்" என்றான்.

16 அப்பொழுது மிக்கேயாஸ், "இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளில் சிதறி இருக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை. அவர்கள் தத்தம் வீட்டிற்கு அமைதியாய்த் திரும்பிப் போகட்டும்' என்கிறார்" என்று சொன்னார்.

2 நாளாகமம் அதிகாரம் 18

17 அதைக்கேட்டு இஸ்ராயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "இவன் எனக்குச் சாதமாக அன்று, பாதகமாகவே எப்போதும் இறைவாக்கு உரைப்பான் என்று நான் உமக்கு ஏற்கெனவே சொல்லவில்லையா?" என்றான்.

18 அப்பொழுது மிக்கேயாஸ், "ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்: ஆண்டவர் தம் அரியணையின் மேல் வீற்றிருக்கிறதையும், விண்ணகப் படையெல்லாம் அவரது வலப்புறத்திலும் இடப்பபுறத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

2 நாளாகமம் அதிகாரம் 18

19 அந்நேரத்தில் ஆண்டவர், 'இஸ்ராயேலின் அரசனாக ஆக்காப் கலாத் நாட்டு இராமோத்திற்குப் போய் அங்கே வீழ்ச்சியடையும்படி அவனை வஞ்சிக்கப் போகிறவன் யார்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் பலவாறு பதில் சொன்னார்கள்.

20 அப்பொழுது ஓர் அரூபி வந்து ஆண்டவருக்கு முன்பாக நின்று, 'நானே போய் அவனை வஞ்சிப்பேன்' என்றது. 'எவ்வாறு?' என்று ஆண்டவர் அதைத் கேட்டதற்கு,

21 அரூபி, 'நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் பொய் சொல்ல வைப்பேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'இவ்வாறு செய்தால் அவன் உன்னாலே ஏமாந்து போவது நிச்சயம். போய் அவ்வாறே செய்' என்றார்.

2 நாளாகமம் அதிகாரம் 18

22 எனவே, இதோ பொய் சொல்லும்படி உம்முடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் ஆண்டவர் தூண்டியுள்ளார்; அவர் உம்மைக் குறித்துத் தீமைகளையே கூறியிருக்கிறார்" என்றார்.

23 அந்நேரத்தில் கனானாவின் மகன் செதேசியாஸ் அருகில் வந்து மிக்கேயாசைக் கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி எவ்வாறு என்னை விட்டு அகன்று உன்னிடம் வந்து பேசிற்று என்று சொல்" என்றான்.

24 அதற்கு மிக்கேயாஸ், "நீ அறைக்கு அறை சென்று ஒளிந்து கொள்ள முயலும் போது அதை அறிந்து கொள்வாய்" என்று பதில் கூறினார்.

2 நாளாகமம் அதிகாரம் 18

25 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன், "நீங்கள் மிக்கேயாசைப் பிடித்து அவனை நகர்த் தலைவன் ஆமோனிடமும் அமெலேக்கின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். 'இம்மனிதனைக் காவலில் வையுங்கள்;

26 நான் போய்ச் சமாதானத்தோடு திரும்பி வரும் வரை இவனுக்குக் கொஞ்சம் அப்பமும் தண்ணீருமே கொடுங்கள்' என்று அரசர் கட்டளையிட்டுள்ளதாக அவர்களிடம் சொல்லுங்கள்" என்றான்.

27 அதற்கு மிக்கேயாஸ் அரசனை நோக்கி, "தாங்கள் சமாதானத்தோடு திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்று அறிந்து கொள்ளும். மக்களே, நீங்கள் எல்லாரும் இதை நன்றாய்க் கவனித்து கொள்ளுங்கள்" என்றார்.

2 நாளாகமம் அதிகாரம் 18

28 பின்னர் இஸ்ராயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் புறப்பட்டுக் கலாத் நாட்டு இராமோத்தின் மேல் படையெடுத்துச் சென்றார்கள்.

29 இஸ்ராயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "நான் மாறு வேடத்தில் போருக்குப் போவேன், நீரோ அரச உடைகளை அணிந்திரும்" என்று சொல்லி, இஸ்ராயேலின் அரசன் தன் அரச உடையைக் களைந்து மாறுவேடத்தில் போருக்குச் சென்றான்.

30 சீரியா அரசனோ தன் குதிரைப் படைத்தலைவர்களை நோக்கி, "நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் சண்டையிடாமல், இஸ்ராயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.

2 நாளாகமம் அதிகாரம் 18

31 ஆதலால் குதிரைப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்ட போது, அவன் தான் இஸ்ராயேலின் அரசன் என்று கருதி அவனோடு போரிடும்படி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது யோசபாத் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டான். ஆண்டவரும் அவனுக்குத் துணையாக வந்து, எதிரிகள் அவனை விட்டு விலகும்படி செய்தார்.

32 ஏனெனில், குதிரைப் படைத் தலைவர்கள், இவன் இஸ்ராயேலின் அரசன் அல்லன் என்று கண்டு கொண்டு அவனை விட்டு அகன்று போனார்கள்.

2 நாளாகமம் அதிகாரம் 18

33 ஆனால் ஒரு மனிதன் ஆத்திர அவசரமாய்த் தன் வில்லை நாணேற்றி அம்பை எய்தான். அது இஸ்ராயேல் அரசனின் கழுத்துக்கும் தோளுக்கும் இடையிலே பட்டது. அப்பொழுது ஆக்காப் தன் சாரதியைப் பார்த்து, "நீ தேரைத் திருப்பி என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ, காயமடைந்துள்ளேன்" என்றான்.

34 நாள் முழுவதும் போர் கடுமையாக நடந்தது. மாலை வரை இஸ்ராயேலின் அரசன் சீரியருக்கு எதிராகத் தன் தேரிலே நின்று கொண்டு போரிட்டான்; சூரியன் மறையும் வேளையிலே உயிர் நீத்தான்.